சாதி​வாரி சர்​வேயை நடத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்​டும்: அன்​புமணி வலி​யுறுத்​தல்


சென்னை: மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பு, தமிழக அரசு சாதிவாரி சர்வே நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்துடன் அங்கு பட்டியல் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள 101 சாதிகளின் சமூக பின்தங்கிய நிலை, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதற்கான சாதிவாரி சர்வே தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

இந்த கணக்கெடுப்புக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 60 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் உள் இடஒதுக்கீட்டுக்கான தகவல்கள் போதுமானவை அல்ல என்பதால் பட்டியலின மக்களுக்கு மட்டுமான சிறப்பு சாதிவாரி சர்வேயை கர்நாடக அரசு மேற்கொண்டிருக்கிறது.

மத்திய அரசால் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பெறப்படும் சாதி என்ற ஒரே ஒரு விவரம் மட்டும் எப்படி முழுமையான சமூகநீதி வழங்க போதுமானதாக இருக்கும். தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் விவரங்கள் தேசிய அளவில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதற்கு மட்டும் தான் போதுமானதாக இருக்கும்.

சமூகத்தில் எந்தெந்த சாதிகள் சமூகநிலை, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட கூறுகளில் மிகவும் பின் தங்கியுள்ளன என்பதை அறிய தெலங்கானா, பிஹார், கர்நாடகாவில் நடத்தப்பட்டது போன்ற சாதிவாரி சர்வே கட்டாயம் ஆகும். தமிழகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்க தமிழக அரசு சாதிவாரி சர்வே நடத்த முன்வர வேண்டும். மத்திய அரசின் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே இதை நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x