நில அபகரிப்பு வழக்​கு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், அவரது மனைவி மே 23-ல் கட்​டா​யம் ஆஜராக உத்தரவு


சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அவரது மனைவி காஞ்சனாவும் வரும் மே 23-ம் தேதியன்று குற்றச்சாட்டுப் பதிவுக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவி்டப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பார்த்திபன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகிய இருவர் மீதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நடந்து வருகிறது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கு கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவைக் கூட்டம் நடந்ததால் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதையேற்ற நீதிபதி ஜெயவேல், இந்த வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சரும் அவரது மனைவியும் மே 6-ம் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆஜராகவில்லை. அதையடுத்து இந்த வழக்கை வரும் மே 23-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் கட்டாயம் குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஆஜராக வேண்டும் என்றும், ஒருவேளை அவர்கள் ஆஜராகாவிட்டாலும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என அறிவித்து விசாரணையை தள்ளிவைத்தார்.

x