ஓசூர்: ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயிலில், பக்தர்களுக்கு வழங்கிய பிரசாதத்தில் உயிரிழந்த குட்டி பாம்பு இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஓசூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் விற்பனை செய்யும், பிரசாதமாக புளியோதரை, தயிர்சாதம் ஆகியவை பக்தர்கள் கட்டணம் செலுத்தி வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மதனிகா என்கிற பக்தர் இன்று கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின்னர். அங்கு விற்பனை செய்த பிரசாதம் வாங்கிய போது, புளி சாதத்தில் வால் போல தென்பட்டதால், அதனை பிரித்து பார்த்த போது, அதில் உயிரிழந்த நிலையில் குட்டி பாம்பு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மதனிகா இந்து அறநிலைத்துறை செயல் அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்தார். கோயில் பிராசதத்தில் பாம்பு குட்டி இருந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து இந்து அறநிலைத்துறை செயல் அலுவலர் சாமிதுரை கூறும் போது, ''கோயில் பிரசாதம் செய்து விற்பனை செய்வதற்காக ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். அதே போல் கடந்த 5 ஆண்டுகளாக ஏலம் முறையில் தொடர்ந்து திருச்சியை சேர்ந்த வாசுதேவன் என்பருக்கு இந்தாண்டு ரூ. 5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கோயிலில் அவர் விற்பனை செய்த பிரசாதத்தில் பாம்பு உள்ளதாக பெங்களூரை சேர்ந்த பெண் பக்தர் புகார் அளித்தார். பின்னர் உடனடியாக பிரசாதம் அனைத்தையும் கீழே கொட்டி விட்டோம். இது குறித்து புகார் அளித்த பக்தர் மற்றும் பிரசாதம் விற்பனை செய்தவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் எனக் கூறினார்.