நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடையை இடிக்க நடவடிக்கை: கும்பகோணத்தில் மக்கள் போராட்டம்


படம்: சி.எஸ்.ஆறுமுகம்

தஞ்சை: கும்பகோணம் மாநகராட்சி 28-வது வார்டு அரண்மனைக்காரத் தெருவில் குளமாக இருந்த இடம் தூர்ந்து, அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கிழக்குப் பகுதியில் 2022ம் ஆண்டு ரூ.15 லட்சத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது.

கும்பகோணத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அரண்மனைக் காரத் தெருவில் குளம் இருந்த இடத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையை இடித்து அப்புறப்படுத்த கனரக இயந்திரத்துடன் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று காலை சென்றனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, நகர்மன்ற அதிமுக முன்னாள் உறுப்பினர் கவுரிசங்கர் தலைமையில் கனரக இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ், மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், மாதவன் ராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளவில்லை.

இதையடுத்து, மாநகராட்சி அலுவலர்கள் ரேஷன் கடையை நேற்று இடிக்காமல் சென்று விட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் ரேஷன் கடை விரைவில் இடித்து அப்புறப்படுத்தப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

x