தஞ்சை: தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 535 மனுக்கள் வரப்பெற்றன.
குறிப்பாக, சத்துணவு திட்டத்தில் அமைப்பாளர், உதவியாளர் பணி வழங்கக் கோரி அதிகளவில் மனுக்கள் வரப்பெற்றதை அறிந்த ஆட்சியர், சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக யாரேனும் பணம் கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம் என மனு அளித்த பெண்களிடம் அறிவுறுத்திய ஆட்சியர், ஒலிபெருக்கி வாயிலாக கூட்டத்திலும் அறிவித்தார்.
இக்கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பழனியம்மாள் (30) மூன்று சக்கர சைக்கிள் கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக கூட்ட அரங்கில் தரையில் தவழ்ந்து வந்தார். அவரைக் கண்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உடனடியாக இருக்கையில் இருந்து எழுந்து கீழே சென்று பழனியம்மாளிடம் அவரது கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவின் பேரில் 2 வகையான மூன்று சக்கர சைக்கிளை அலுவலர்கள் கொண்டு வந்தனர்.
அதில் விருப்பமான ஒன்றை தேர்வு செய்யுமாறு பழனியம்மாளிடம் ஆட்சியர் கூறினார். இதையடுத்து, பழனியம்மாள் கேட்ட மூன்று சக்கர சைக்கிளை ஆட்சியர் அவருக்கு உடனடியாக வழங்கினார். மனு அளித்த 15 நிமிடங்களில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ஆட்சியருக்கு பழனியம்மாளும் அவரது தந்தையும் நன்றி கூறினர்.
விவசாயிகள் மனு..: கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு: நாங்கள் நான்கைந்து தலைமுறை களாக கள்ளப்புலியூரில் வசித்து வருகிறோம். லட்சுமண முதலியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், அந்த இடத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க தேர்வு செய்துள்ளதா க தகவல் அறிந்தோம். அங்கு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால், விவசாயம் செய்ய முடியாமல் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, பல்கலைக்கழகத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.