கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது - அதிமுக குற்றச்சாட்டு


புதுச்சேரி: கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது என்று புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் இரண்டு முன்னாள் முதல்வர்கள் வாய்க்கு வந்தபடி தவறான தகவல்களை நேரத்துக்கு ஏற்ப பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான் முதல்வராக பதவி ஏற்கும் போது குறுக்கு வழியில் அப்போதைய தெல்லித்தோப்பு எம்எல்ஏ ஜான்குமாரிடம் பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்து அவரது ராஜினாமாவை விலைக்கு வாங்கினார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் ரேஷன் கார்டுக்கு ரூ.2000, வாக்கு சீட்டுக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றார்.

அதேபோல் முன்னாள் முதல்வரும், தற்போதைய எம்பியுமான வைத்திலிங்கம் ஆட்சிக் காலத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் கமிஷன் பெற்றுக்கொண்டு தரமற்ற அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் வெகுண்டெழுந்து அவரது வீட்டின் முன்னாலேயே அந்த தரமற்ற அரிசியை கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதை மறந்து விட்டார்.

தற்போது கூட அரசால் விநியோகம் செய்யக்கூடிய அரிசியின் விலை சுமார் ரூ.48.50 இருக்கும். ஆனால் அரசு ரூ.80 கொடுத்து அரிசியை கொள்முதல் செய்வதாக பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்கள். இதற்கு அரசு சார்பில் உரிய பதில் அளிக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் கோடை காலத்தில் கட்டுமான தொழிலில் பெரும்பான்மையோர் ஈடுபடுவர். இந்த சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் இதை அவர்கள் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவருக்கு இந்த விலை ஏற்றம் தெரியுமா என்று தெரியவில்லை.

புதுச்சேரி மக்களுக்கு குறைந்த விலையில் நேர்மையான விலையில் தரமான கட்டுமான பொருட்கள் வழங்குவதற்கு அரசு சார்பில் பல்வேறு கட்டுமான சொசைட்டிகள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உருவாக்கப்பட்ட கட்டுமான சொசைட்டிகள் இன்று அரசின் தவறான கொள்கை முடிவுகளால் இழுத்து மூடப்பட்டுள்ளன.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கட்டுமான பொருட்களின் விற்பனையாளர்கள் தங்களது பொருட்களின் விலையை மனம் போன போக்கில் உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இந்த விலையேற்றத்தை தடுத்து விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

எனவே முதல்வர் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள், கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் கூட்டத்தை கூட்டி கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

x