ராமநாதபுரம்: மகன்கள் தங்களைப் பராமரிக்காததால் அவர்களுக்கு எழுதிக்கொடுத்த செட்டில்மென்ட் சொத்து ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும் என வயதான பெற்றோர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜாலு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் அருகே பெருவயல் கலையனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைக் கண்ணு (92) தனது மனைவி குப்பம்மாளுடன் (85) வந்து மனு அளித்தார்.
மனுவில் கூறியுள்ளதாவது: எங்களுக்கு 2 மகன்கள் 5 மகள்கள் உள்ளனர். எனது இரு மகன்களும் எங்களை கவனித்துக் கொள்வதாக கூறி 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை எழுதி வாங்கிக் கொண்டனர். அதற்குப் பின் எங்களை மகன்கள் கவனிக்கவில்லை, மகள்கள் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறோம். எனவே, நாங்கள் எழுதிக் கொடுத்த இனாம் செட்டில்மென்ட் சொத்து ஆவணத்தை ரத்து செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.