சிவகங்கை: சிங்கம்புணரி அருகே கோவில்பட்டியில் உள்ள சோழந்திக் கோட்டை என்ற இடத்தில் சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா, செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன், அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் வேலாயுத ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது சோழ, பாண்டியர் பெயர் பொறித்த வாணதிராயர் ஆசிரியம் கல்வெட்டை கண்டறிந்தனர்.
இது குறித்து புலவர் காளிராசா கூறியதாவது: அந்த கல்வெட்டை முனீஸவரர் சுவாமியாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். அந்த கல் அகலமாக உள்ளது. இரண்டரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது. அதில் மொத்தம் 6 வரிகள் உள்ளன. எழுத்தமைதியை பார்க்கும் போது, 14 மற்றும் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை போல் உள்ளது. நல்ல வேலைப்பாட்டுடன் சாசனம் எழுதும் அமைப்பில் மேலே 2 வெண் சாமரங்களும், பக்கவாட்டில் குத்து விளக்கும், அடிப்பகுதியில் பூரண கும்பமும் உள்ளன.
ஆசிரியம் கல் வெட்டு என்பது ஆட்சியாளர்கள் வழங்கிய தான தர்மத்தைக் காத்தல் அல்லது ஆதரவு வேண்டுவோருக்கு பாதுகாப்பு அளித்தல் என்பதை குறிக்கும். 11ம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராகக் கொண்டு சோழ, பாண்டியர் என்ற பெயரில் ராஜேந்திரசோழனின் 2-வது மகன் இரண்டாம் ராஜேந்திரன் ஆட்சி செய்த காலக்கட்டத்தில், தற்போது கல்வெட்டு கண்டறியபட்ட பகுதி கேரள சிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.
இப்பகுதியை அவர்கள் காவல் பாதுகாப்பு செய்து வந்துள்ளனர். பின்னர் 14ம் நூற்றாண்டில் ஆட்சியாளராக வந்த மாவலி வாணதிராயரும் இரண்டாம் ராஜேந்திரனை போன்றே அப்பகுதியில் காவல் பாதுகாப்பு செய்து வந்துள்ளதை கல்வெட்டு செய்தி மூலம் அறிய முடிகிறது.
மேலும், மாவலி சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர்கள், தங்களை மாவலி வாணதிராயர் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் சிற்றரசர்களாக வும், அரசியல் அலுவலர்களாகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.