இளையான்குடி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு: ஒரு குடம் தண்ணீரை ரூ.12-க்கு வாங்கும் மக்கள்!


சிவகங்கை: இளையான்குடி அருகே 4 கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், அப்பகுதி மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வல்லிக்குளம் ஊராட்சியில் சாலியந்திடல், தோக்கானேந்தல், விஸ்வநாதபுரம், வல்லக்குளம் ஆகிய 4 கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்களுக்கு ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து அந்தந்த கிராமங்களில் அமைக்கப்பட்ட தெரு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதற்காக சூராணம் சாலை வழியாக செல்லும் பிரதான குழாயில் அக்கிராமங்களுக்கு இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு காவிரி குடிநீர்த் திட்ட பிரதான குழாய் சீரமைப்பு பணிக்காக 4 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. பிரதான குழாயில் சீரமைப்பு பணி முடிவடைந்த பிறகும், இந்த 4 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்தை தொடங்கவில்லை. இதனால் கிராம மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வல்லக்குளத்தைச் சேர்ந்த சிவசாமி கூறுகையில், பிரதான குழாயை சீரமைப்பதாகக் கூறி, குடிநீர் இணைப்பை துண்டித்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்தும் இணைப்பை கொடுக்கவில்லை. குடிநீர் வராததால் ஒரு குடம் ரூ.12-க்கு வாங்கி பயன்படுத்துகிறோம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தோம். கோடை காலத்தில் தண்ணீர் தேவை அதிகரித்து ள்ள நிலையில், உடனடியாக காவிரி குடிநீர்த் திட்டத்தில் தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x