செய்யாறில் குடிநீர் பாட்டிலில் உயிரிழந்து கிடந்த பல்லி: பிறந்தநாள் விழாவில் சலசலப்பு


திருவண்ணாமலை: செய்யாறில் பிறந்தநாள் விழாவுக்காக வாங்கப்பட்ட அரை லிட்டர் குடிநீர் பாட்டலில் உயிரிழந்த நிலையில் பல்லி மிதந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆதிகேசவன் தெருவைச் சேர்ந்தவர் பிரதாப் - அருணா தம்பதியினரின் மகள் தருனிகா ஸ்ரீயின் பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் மாலை கொண்டாடப்பட்டது. செய்யாறு காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் உணவு உபசரிப்புக்காக செய்யாறில் இயங்கி வரும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் இருந்து அரை லிட்டர் கொள்ளளவு கொண்ட 210 எண்ணிக்கையிலான குடிநீர் பாட்டில்களை வாங்கியுள்ளனர்.

அதை விருந்தினர்களுக்கு விநியோகம் செய்த நிலையில் மீதமிருந்த பாட்டில்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், மீதம் இருந்த தண்ணீர் பாட்டிலில் ஒன்றை நேற்று காலை எடுத்துப் பார்த்த போது அதில் சிறிய பல்லி ஒன்று உயிரிழந்த நிலையில் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த பாட்டிலில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஏதும் அச்சிடப்படாமல் இருந்தது. இது குறித்து, பிரதாப் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

கோடை காலம் என்பதால் அதை சாதகமாக்கிக் கொண்டு தண்ணீர் பாட்டில் நிறுவனங்களில் இப்படி சுகாதாரம் இல்லாமல் பாட்டில்களை விற்பனை செய்வதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

x