கழிப்பறை, நிழற்குடை, சிசிடிவி இல்லை: புதுச்சேரியின் புதிய பொலிவுறு பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி!


புதுச்சேரி: மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அடிப்படை வசதிகள் குறைபாட்டால் இந்த புதிய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டது. பணிகள் முடிந்து திறக்கப்படாமல் இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

சீரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா தேதி பல முறை அறிவிக்கப்பட்டு, திறக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த மே 2-ம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

பேருந்து நிலையத்துக்கு வெளியே, ‘ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து நிலைய முனையம்’ என பெயர் பலகை வைக்கப்பட்டது. ஆனால் பாஜக எம்எல்ஏக்கள் வாஜ்பாய், மோடி பெயர்களில் ஏதேனும் ஒன்றை வைக்குமாறு கோரினர். ஆனால் அக்கோரிக்கை ஏற்கப்பட வில்லை. இந்நிலையில் திறப்பு விழா கல்வெட்டில், ‘ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையம்’ என்றே இருந்தது. அதில் ராஜீவ் காந்தி பெயர் இடம் பெறவில்லை. விழா அழைப்பிதழிலும் பெயர் இடம் பெறவில்லை. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கல்வெட்டில் ராஜீவ் காந்தி பெயர் வைக்க கோரியுள்ளனர்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட சீரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் 42 கடைகள், உணவகங்கள் மற்றும் பேருந்துகள் நின்று ஏற்றி செல்ல நடைமேடைகள் உள்ளன. பயணிகள் காத்திருப்பு பகுதியும் உள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயங்கத் தொடங்கினாலும், இங்கு கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை. அவை செயல்படாமல் இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுபற்றி அரசு தரப்பில் விசாரித்தால், கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதனால் கடைகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் அரசு சார்பு நிறுவனங்களான பாண்லே, லே கபே ஆகியவற்றின் மூலம் குடிநீர் பாட்டில், காபி, குளிர்பானங்கள், பிஸ்கட், பிரட் விற்கப்படுகின்றன. மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படாத சூழலில் இக்கடையில் கூட்டம் அலைமோதுகிறது.

முன்பு இருந்தது போல் பழக்கடைகள், பூக்கடைகளுக்கு பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 கடைகள் உள்ளன. அந்த கடைகளும் இதுவரையில் வாடகைதாரர்களுக்கு ஒதுக்கப்படாததால் காலியாக கிடக்கின்றன. பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே இருந்த இடங்களில் அந்தந்த ஊர்களுக்கான பேருந்துகளை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை, விழுப்புரம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மேற்கூரை இல்லை. இதனால் பஸ்கள் வெயிலில் நிற்கிறது. பயணிகளும் வெயிலில் காத்திருநது ஏறிச் செல்கின்றனர். அதேபோல் திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பதி, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியிலும் மேற்கூரை இல்லை. பயணிகள் பெரும்பாலும் நகராட்சி வாகன நிறுத்தத்தில் டூவீலர்களை நிறுத்துகின்றனர். அங்கேயும் மேற்கூரையும் இல்லை. வண்டிகள் வெயிலில் நிற்கின்றன.

இலவச கழிப்பிடம் இல்லை: மக்கள் கூடும் பகுதிகளில் இலவச கழிப்பிடம் கண்டிப்பாக அமைக்க வேண்டும். புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் முன்பு இலவச கழிப்பிடம் நகராட்சி சார்பில் இருந்தது. தற்போது சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிட வசதி இல்லை.

பாதுகாப்புக்கு முக்கியமான சிசிடிவி கேமராக்களும் இதுவரையிலும் பேருந்து நிலையத்தில் பொருத்தப்படவில்லை. இது, இரவு நேரத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உகந்தது இல்லை என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, "புதிய பேருந்து நிலையத்தில் 46 சிசிடிவி கேமராக்கள் பொருத்த இருக்கிறோம். அதேபோல் கழிப்பறைகள் கூடுதலாக அமைக்கவுள்ளோம். பேருந்துகள் நிற்க மேற்கூரையும் அமைக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கின்றனர்.

இழுத்தடிக்கப்பட்டு, ஒருவாறாக திறக்கப்பட்ட நிலையில் இந்தச் சிக்கல்கள் பயணிகளை மேலும் அதிருப்தி அடையச் செய்திருக்கிறது- ரூ. 26.5 கோடியில் நீண்ட காலமாக நடந்து, இழுபறிக்கு மததியில் திறந்த பேருந்து நிலையத்தில் இந்த வசதிகளையெல்லாம் செய்திருக்கலாம். ஏன், இன்னும் இன்னும் பணிகளை இழுத்தடித்து வருகின்றனர் என்ற மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கின்றனர்.

x