கிருஷ்ணகிரி: ஜவளகிரி அருகே செயல்படாத குவாரியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, அப்பகுதியில் 7 இடங்களில் சிசிடிவி பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜவளகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜுகூர் கிராமத்தில் வனத்தை யொட்டிய பகுதியில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இக்குவாரியில் கடந்த 2-ம் தேதி சிறுத்தை ஒன்று குட்டியுடன் பாறையின் மீது படுத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், ஜுகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் எனக் கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரகர் அறிவழகன் தலைமையில் வன ஊழியர்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும் கல்குவாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், நேற்று வரை கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை. இதையடுத்து, வேறு இடங்களில் கண்காணிப்பு கேமாரக்களை பொருத்தி, தொடர் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: ஜுகூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் வந்த தகவல் அடிப்படையில், அக்கிராமத்தில் உடனடியாக 7 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கடந்த 3 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதா எனக் கண்காணித்து வருகிறோம், ஆனால், இதுவரை கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை. இருப்பினும் சிறுத்தை இப்பகுதிக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது.
தற்போது, உணவுக்காக அடர்ந்த வனப்பகுதிக்குச் சிறுத்தை இடம் பெயர்ந்திருக்கலாம். சிலர் குட்டியுடன் சிறுத்தை இருப்பதாகத் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் உள்ளதால், கிராம மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. இரவு நேரங்களில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்த்துப் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.