கிருமி நீக்கம் செய்யபட்ட முட்டையில் மயோனைஸ் தயாரிக்கலாம்: நாமக்கல் ஆட்சியர் தகவல்


நாமக்கல்: மத்திய உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று, கிருமி நீக்கம் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட முட்டைகளிலிருந்து மயோனைஸ் தயாரித்து, விற்பனை செய்யலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மயோனைஸ் தயாரிக்கும்போது பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மயோனைஸிலும் சேர்ந்துவிடும். அதைச் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் போக்கு, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரிக்கவும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

எனவே, கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மயோனைஸை தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கை கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், மயோனைஸ் பிரியர்களுக்கு மாற்றுத் தேர்வாகக் கிருமி நீக்கம் செய்யப் பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மயோனைஸ் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் வணிகர்களுக்குத் தடையில்லை. இவை இரண்டும் பொட்டலமிடப்பட்டு, லேபிள் விவரங்களுடன் விற்பனை செய்ய வேண்டும்.

கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மயோனைஸ் சொந்தத் தயாரிப்பு உணவுப் பொருளாக உள்ளதால், அதனைத் தயாரித்து விற்பனை செய்ய மத்திய உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற https://foscos.fssai.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து, ரூ.7,500 கட்டணம் செலுத்த வேண்டும். உரிமம் இல்லாமல் மயோனைஸ் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மயோனைஸ் தொடர்பாக நுகர்வோர் 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண் மற்றும் unavupukar@gmail.com என்ற இ-மெயிலில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

x