திருவாரூர்: குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.15,000 ஊக்க நிதியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கோடை மழையால் சாகுபடி பயிர்களான பருத்தி, எள், உளுந்து, வாழை மரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் பேரழிவை சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
தனிநபர் காப்பீடு திட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்துக்கு என தனி காப்பீடு திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும். மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், தூர் வாரும் பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். குறுவைக்கு தேவையான குறுகிய கால விதை நெல் தரமானவும், குறைந்த விலையிலும் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான கூட்டுறவு கடன் வழங்க கூட்டுறவு சங்கங்கள் முன்வர வேண்டும்.
ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் சாகுபடி தொடங்குவதற்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15,000 ஊக்க நிதியாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல, தமிழகத்திலும் குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.15,000 ஊக்க நிதி வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம் சாகுபடி தொடங்குவதற்கு முன்பே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.