திருச்சி: 14 ஆண்டுகளாக திறப்பு விழா காணாமல் உள்ள சிவாஜி சிலை மீண்டும் இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் அரசு மருத்துவமனை அருகில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2009ம் ஆண்டு பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை திறப்பு விழா தள்ளிப் போனது. இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், சிலை திறப்பு விழா கிடப்பில் போடப்பட்டு, சிலை துணி கொண்டு மூடப்பட்டது.
சிவாஜி சிலையை திறக்கக் கோரி அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாலக்கரை ரவுண்டானாவில் சிலை அமைக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என காரணம் கூறப்பட்டது.
இதனிடையே, சட்டப்பேரவையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், சிவாஜி சிலை திறப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, “வேறு இடத்தில் பூங்காவில் சிவாஜி சிலை நிறுவப்பட்டு திறக்கப்படும்” என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து, பாலக்கரை ரவுண்டானாவில் இருந்த சிவாஜி சிலை பெயர்த்து எடுக்கப்பட்டு, சோனா- மீனா திரையரங்கம் எதிரே வார்னர்ஸ் சாலையில் உள்ள மினிபூங்காவில் சிலையை நிறுவும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக, திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஏப்.29ம் தேதி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அரசு புறம்போக்கு, பொது இடங்களில் சிலைகள், கட்சிக் கொடிக் கம்பங்களை நிறுவக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு சிலை நிறுவும் திட்டம் கைவிடப்பட்டு, நேற்று முன்தினம் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, சிவாஜி சிலையை நிறுவுவதற்கு தனியார் இடத்தை தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி மேயரும், திமுக மேற்கு மாநகரச் செயலாளருமான மு.அன்பழகன் ஈடுபட்டார். இதில், திருச்சி அரசு மருத்துவமனை அருகில் வயலூர் சாலை பிரியும் இடத்தில் சாலையில், மறைந்த குமார சாமி என்பவருக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த இடத்தை ஜாபர்ஷா தெருவில் வசிக்கும் குமாரசாமியின் மனைவி மற்றும் மகள்கள், மேற்கு மாநகர திமுக பெயரில் நேற்று தானசெட்டில்மென்ட் எழுதிக்கொடுத்தனர்.
இது குறித்து திமுக மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் கூறியபோது, “திருச்சி மேற்கு மாநகர திமுக பெயரில் வயலூர் சாலையில் தானமாக பெறப்பட்ட 8-க்கு 8 அளவுள்ள இடத்தில் சிவாஜி சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றார். மேலும், இதுதொடர்பாக இன்று(மே 6) நடைபெறும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சிவாஜி சிலை தொடர்ந்து இடம் மாற்றப் பட்டு, திறப்பு விழா காண்பது தாமதமாகி வருவதால் அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.