திருச்சி: பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு விழாவுக்குப் பின், சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை மே 9ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார். அதன்பின், அனைத்து பேருந்துகளும் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து தான் புறப்படும் எனவும், நகரப் பேருந்துகளை தவிர மற்ற நகரங்களுக்கான பேருந்துகள் எதுவும் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படாது எனவும் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இது குறித்து ஆட்சியர் மா.பிரதீப் குமாரிடம் கேட்டபோது, ”மே 9ம் தேதி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய திறப்பு விழா மட்டுமே நடைபெறுகிறது. முழுமையாக பயன்பாட்டுக்கு வருவதற்கு 10 முதல் 15 நாட்களுக்கு மேலாகும். அதுவரை, சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படும். அதன்பிறகு பொதுமக்கள், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே போக்குவரத்து மாற்றம் படிப்படியாக செய்யப்படும். எனவே, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை” என்றார்.