திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி: மாற்றுத் திறனாளிகளுக்கான விண்ணப்பத்தை ரூ.50-க்கு விற்றதாக புகார்


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு எழுதித்தரும் பணியில் ஈடுபட்டிருந்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கான விண்ணப்பத்தை ரூ.50-க்கு விற்றதை தட்டிக்கேட்ட துறை ஊழியர்களிடம் அவ மரியாதையாக நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை விண்ணப்பங்கள், வாராந்தோறும் நடைபெறும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த படிவத்தை ஆட்சியர் அலுவலகத்தில் மனு எழுதும், திருப்பூர் தென்னம்பாளையம் ஆர்விஇ லே-அவுட்டை சேர்ந்த நடராஜன் (58) என்பவர், நகலெடுத்து ரூ.50-க்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உரிமைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக ஊழியர் ஆகியோர் சென்று கேட்டுள்ளனர். அப்போது நடராஜன், இருவரிடம் அப்படித்தான் விற்பேன் என்று தெரிவித்ததுடன் அவர்களிடம் செருப்பை காண்பித்து அவ மரியாதையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு புகார் அளித்தனர்.

இது தொடர்பாக நடராஜன் கூறும்போது, “பொதுமக்களிடம் அதிகாரிகள் மரியாதைக்குறைவாக நடந்து கொள்கிறார்கள். நான் ஆத்திரத்தில் செருப்பை தூக்கி காண்பித்தேன்” என்றார்.

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சிலர் கூறும்போது, “திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொது மக்களிடம், மனு எழுதித்தர சிலர் ரூ.50 முதல் ரூ.100 வரை பெறுகின்றனர். அதேபோல் சிலரிடம் குடும்ப அட்டை, மகளிர் உரிமைத் தொகை மற்றும் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெற்றுத்தருவதாக கூறி, தரகர்களாக மாறி பணம் பார்க்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இன்றைக்கு ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடமே அத்துமீறி நடந்துகொள்ளும் அளவுக்கு, நிலைமை கைமீறி சென்றுள்ளது” என்றனர்.

x