திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
மங்கலத்தை சோ்ந்த கணேஷ் பாக்கியராஜ் அளித்த மனு: எனக்கு சமூக வலைதளத்தில் ஒரு விளம்பரம் வந்தது. இதில் தங்கத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து கோவையை சோ்ந்த பெண் ஒருவா் தொடா்பு கொண்டார். அவரது பேச்சை நம்பி ரூ.1 லட்சம் செலுத்தினேன். அதில் லாபமாக ரூ.4 ஆயிரம் கொடுத்தார். கூடுதலாக முதலீடு செய்தால் இன்னமும் அதிகமாக லாபம் கிடைக்கும் எனக் கூறினார். இதனை நம்பிய நான் கடந்த 4 மாதத்தில் ரூ.26.5 லட்சம் செலுத்தினேன். ஆனால் பணத்தை பெற்ற அவா் லாபத்தையும் தரவில்லை. எனது முதலீட்டையும் தரவில்லை. எனவே எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும். மோசடி செய்த அந்த பெண் உட்பட அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் 63 வேலம்பாளையம், நடுவேலாம்பாளையம் கார்த்திகேயன் அளித்த மனு: நான் விசைத்தறி வேலைக்கு சென்று வருகிறேன். எனது மகன் விஷாந்த் (7). உடல் நிலை சரியில்லாததால், மருத்துவமனையில் பரிசோதித்தபோது, இதயம் செயலிழக்கும் தருவாயில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே மாற்று இதயம் பொருத்த வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவு ஆகும். கூலித் தொழிலாளியாக வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதால், என் மகனுக்கு தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
தனியார் ஈமு பார்ம்ஸ் முதலீட்டாளர்கள் அளித்த மனு: திருப்பூர் நாச்சிபாளையத்தில் இயங்கி வந்த ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தோம். ஆனால் பணத்தை பெற்று உரிமையாளா்கள் மோசடி செய்தனா். இது தொடா்பான வழக்கில் அவா்களுக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. இந்நிலையில் அவா்கள் சிறையில் இருந்து வெளியே வந்து பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். எனவே எங்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் கோடாங்கிபாளையம் மேற்கு ராசாக் கவுண்டன் பாளையத்தை கிராம மக்கள் அளித்த மனு: பல்லடம் கோடங்கிபாளையம் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரி சுரங்க திட்டத்தில் அனுமதி இல்லாத இடத்தில் அதிகப்படியான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. கனி மங்கள் வெட்டி எடுக்க சட்ட விரோத வெடி மருந்து எங்கிருந்து, யார் மூலம் பெறப்பட்டது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டவிரோதமாக வெடி மருந்து கொண்டு வந்து பயன்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரானைட் ஊழல் குறித்து கண்டறிந்து ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தவா் சகாயம் ஐ.ஏ.எஸ். அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது கடமை ஆகும். எனவே அவருக்கு விலக்கப்பட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர். கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக 467 மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.