பாக்., வங்​கதேசத்தினரை வெளியேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல


சென்னை: இந்திய ராணுவம் குறித்து பற்றி விஷம கருத்து பரப்புவோர் மீது தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை கொன்று குவித்த தீவிரவாதிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காமில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு பின்னால் 140 கோடி இந்தியர்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது. தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தீவிரவாதத்தின் ஆணிவேராக செயல்படும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியே ஆகவேண்டும். அரசியல் பேதங்களை கடந்து, ஒட்டுமொத்த தமிழகமும் தீவிரவாதத்தை வேரறுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில், சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேச நாட்டினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழக முதல்வர் இதில் துரிதமாக செயல்பட வேண்டும்.

நமது ராணுவம் மீதும், தேச பாதுகாப்பு பற்றியும் விஷமத்தனமான வதந்திகளை பரப்புவோர் மீது தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவாக யார் பேசினாலும் சமூகம் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x