கூடலூர் சிறுவனின் பார்வையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: பொதுமக்கள் பாராட்டு


நீலகிரி: கூடலூரை சேர்ந்த சிறுவனின் பார்வையை காப்பாற்ற 3 மணி நேரத்தில் கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸூக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவரின் கண்ணில் குத்திய குச்சியை அகற்றிய உள்ளுர் மருத்துவர், அடுத்த 4 மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளித்தால் பார்வை இழப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். பதறிய சிறுவனின் பெற்றோர், கூடலூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் என்பவரின் உதவியை நாடினர்.

சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், சக நண்பர்களின் உதவியுடன் 3 மணி நேரத்தில் கூடலூரில் இருந்து கோவை மருத்துவமனையை ஆம்புலன்ஸில் அடைந்து சிறுவனின் பார்வை இழப்பைத் தடுத்தார். நீலகிரி மலைப்பாதையில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் கூறும்போது, ”மலையில் இருந்து சமவெளிக்கு நோயாளிகளை கொண்டு செல்வது மிகவும் சவாலானது. ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உந்துதலில் வாகனத்தை இயக்க வேண்டியிருக்கிறது. 5ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவனின் பார்வை பறிபோகக் கூடாது என்பது மட்டுமே எனக்கு குறிக்கோளாக இருந்தது. வழியில் அந்தந்த ஊரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், முன்னும் பின்னும் ஆம்புலன்ஸ்கள் அணிவகுக்க போக்குவரத்து காவலர்கள் ஒத்துழைப்புடன் 3 மணி நேரத்தில் கோவை மருத்துவமனையை அடைய‌ முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

x