மதுரை: மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையை தடுத்து இயற்கை வளங்களை காப்பாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு தமிழக அரசு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம், டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
இக்கூட்டமைப்பினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: மேலூர் பகுதியிலுள்ள கிரானைட் குவாரிகளில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக சகாயம் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். கிரானைட் கொள்ளை தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதில் விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த சகாயத்தி்ன் சாட்சியம் மிக முக்கியம். நீதிமன்ற விசாரணைக்கு வந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதால், நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சகாயம் கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் கனிமவளக் கொள்ளைகளுக்கு எதிராக போராடும் பல சமூக செயற்பாட்டாளர்கள் தமிழகத்தில் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர்.
இதனிடையே சகாயத்துக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தமிழக அரசு, பாதுகாப்பை விலக்கியது பெரும் அநீதியாகும். உயர் நீதிமன்றம் அமைத்த விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்தவருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே சகாயத்துக்கு, தமிழக அரசு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும், எனக் கோரியுள்ளனர்.