சென்னை: வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சமஸ்கிருதம் என்றும், மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை, சமஸ்கிருதத்தை முக்கிய தூணாக கொண்ட இந்திய அறிவுமுறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சமூகவலைத்தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக்கொண்ட இந்திய அறிவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம்.
வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக்கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறோம். இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசிய கல்விக்கொள்கை என்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.