சென்னை: தமிழகத்தில் கடந்த 2020-க்குப் பிறகு பிஎஸ் 4 ரக வாகனங்களை மோசடியாகப் பதிவு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள் கடந்த 2020 மே மாதம் முதல் தடை செய்யப்பட்டன. ஆனால் தடை செய்யப்பட்ட இந்த பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மோசடியாக பதிவு செய்து புழக்கத்தில் விட்டுள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், சென்னையில் மட்டுமே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300-க்கும் மேற்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை ஆணையரே தெரிவித்துள்ளார். இதேபோல தமிழகம் முழுவதும் பிஎஸ் 4 ரக வாகனங்கள் எந்தவொரு தடையும் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத் துறை, லஞ்சஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத்ராஜா, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ததில் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
அதையடுத்து நீதிபதி, இந்த மோசடியில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.