நிலக்கரி வழங்க மத்திய அரசு நிபந்தனை: எண்ணூர் விரிவாக்க திட்டத்தை மின்வாரியமே செயல்படுத்த முடிவு


சென்னை: தனியாருடன் இணைந்து செயல்படுத்தினால் எண்ணூர் விரிவாக்க மின்திட்டத்துக்கு நிலக்கரி வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, இத்திட்டத்தை தமிழக மின்வாரியமே நேரடியாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

சென்னை அடுத்த எண்ணூரில் தலா 660 மெகாவாட் திறனில் 2 அலகு விரிவாக்க அனல்மின் திட்டங்களை மின்வாரியம் அமைக்கிறது. இதனுடன், எண்ணூர் சிறப்பு அனல்மின் திட்டம் (1,320 மெகாவாட்), தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மின்திட்டம் (1,320 மெகாவாட்) ஆகியவற்றுக்கு, பொதுத் துறையை சேர்ந்த மகாநதி, சிங்கரேணி நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி பெற மத்திய நிலக்கரி அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.

எண்ணூர் விரிவாக்க மின்நிலைய கட்டுமான பணியை லேன்கோ என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக மின்வாரியம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் கடந்த 2018-ல் பணிகள் முடங்கின.

பின்னர், ரூ.4,442 கோடியில் எஞ்சிய பணிகளை தொடர பிஜிஆர் என்ற நிறுவனத்துக்கு கடந்த 2022-ல் பணி ஆணை வழங்கப்பட்டது. அந்த நிறுவனமும் பணிகளை தொடங்காததால் ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, எண்ணூர் விரிவாக்க மின் திட்ட பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிலக்கரி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ‘பொது மற்றும் தனியார் முறையில் மின்திட்டத்தை செயல்படுத்தும்போது, நிலக்கரி ஒப்பந்தத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிலக்கரி ஒதுக்கப்படாது.

எண்ணூர் விரிவாக்க மின்திட்டத்தை மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தினால் மட்டுமே நிலக்கரி ஒதுக்கப்படும்’ என்று மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தை மின்வாரியமே நேரடியாக செயல்படுத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

x