மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிய வேண்டும்: மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்


மதுரை: வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

கடந்த 2-ம் தேதி செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றார். உளுந்தூர்பேட்டை அருகே ஆதீனம் கார் மீது மற்றொரு கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தன்னை சிலர் கொலை செய்ய திட்டமிடுவதாகக் கூறி ஆதீனம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், ஆதீனம் தரப்பு தவறான தகவல்களைப் பரப்பி மதமோதலை தூண்டும் வகையில் பேசியதாக ஆதீனம், அவரது ஓட்டுநர், உதவியாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி செல்வராஜ் உள்ளிட்டோர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தனர்.

அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டில் நடந்த உலக சைவ சித்தாந்த மாநாட்டில் ஆதீனம் பங்கேற்கச் சென்றபோது, விபத்து ஏற்படுத்தி திட்டமிட்டு கொலை செய்ய இஸ்லாமிய சமூக அமைப்பினர் முயன்றனர். மேலும், காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் பேசியதால் பழிவாங்கும் நோக்கில் விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சி நடந்தது என, ஆதீனம் கார் ஓட்டுநர், உதவியாளர் பொது ஊடகங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக குற்றம்சாட்டி பதிவிட்டனர்.

விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஆதீனம் காரை யாரும் பின் தொடர்ந்து விபத்து ஏற்படுத்தவில்லை எனத் தெரிந்தது. அவரது கார் வேகக் கட்டுப்பாடு இன்றி சென்றபோது, அவ்வழியாக வந்த மற்றொரு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சூழலில் இஸ்லாமிய சிறுபான்மையினர் கொல்ல திட்டமிட்டதாக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ஆதீனம், அவரது கார் ஓட்டுநர், உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோக்களை நீக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x