செங்கல்பட்டு: பல்லாவரம் அருகே திரிசூலம் ஊராட்சியில் கடந்த 2020-21-ம் ஆண்டு கட்டப்பட்ட சமுதாயக் கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதே காரணம் என அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த திரிசூலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-21ம் ஆண்டு ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் திரிசூலம் சமுதாயக் கிணறு 2022ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கிணறு அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க தேவையாக இருந்தது.
இந்நிலையில் இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் கிணறு பயன்படுத்த முடியாமல் போனது. இரவு நேரம் என்பதால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. தரமற்ற முறையில் கட்டப்பட்டதே கிணறு இடிந்து விழக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் அவசர அவசரமாக அந்த கிணற்றை பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணைக் கொட்டி மூடும் வேலைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட இந்த கிணறு 3 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்துள்ளது, இந்த ஆட்சியின் ஊழலை வெளிப்படுத் தும் வண்ணம் அமைந்திருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் கூறும்போது, ”திரிசூலத்தில் ஏராளமான கிரஷர்கள் உள்ளன. அங்கிருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் நாள் முழுவதும் இந்த கிணற்றின் வழியாகச் செல்கிறது. லாரியில் அதிக பாரம் உள்ளதால் அழுத்தம் காரணமாக கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது. மக்களின் நலன்கருதி இடிந்து விழுந்த கிணற்றை மூடும் பணி நடைபெறுகிறது. வேறு இடத்தில் விரைவில் கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளனர்.