தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் திட்டில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அதிமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம் வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் திருவைக்காவூர், மன்னிக்கரையூர், மேலமாஞ்சேரி, கீழமாஞ்சேரி, நடுப்படுகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வெள்ளம், மழை, புயல் ஏற்படும் காலங்களில், எடக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றோரத்தில் 15 ஏக்கரில் அமைந்திருக்கும் மணல் திட்டுக்குச் சென்று தங்குவது வழக்கம்.
இந்நிலையில், அந்த மணல் திட்டில் பொக்லைன் மூலம் மணல் அள்ளுவதற்கான ஏற்பாடுகள் அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அந்த மணல் திட்டில் மணல் அள்ளுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக தஞ்சாவூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ரத்தினசாமி, அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் துரை.சண்முக பிரபு, இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் தில்லை.
சூரிய பிரகாஷ் உட்பட ஏராளமான அதிமுகவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து நேற்று மணல் திட்டில் நிறுத்தப் பட்டிருந்த பொக்கலைனை முற்றகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீஸாரிடம், திட்டில் மணல் அள்ளுவதை கைவிடாவிட்டால் தஞ்சாவூர்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக் காரர்கள் கூறிவிட்டு, கலைந்து சென்றனர்.