இளையான்குடி பேரூராட்சியில் 9 மாதங்களாக செயல் அலுவலர் இன்றி பணிகள் பாதிப்பு


சிவகங்கை: இளையான்குடி பேரூராட்சியில் 9 மாதங்களாக செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் 9 மாதங்களாக பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியை நாட்டரசன்கோட்டை செயல் அலுவலர் சண்முகம் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். அவர், அவ்வப்போது இளையான்குடிக்கு வந்து செல்கிறார். இதனால் பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்குவது தாமதமாகிறது. மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கான பிளான் அப்ரூவல், புதிய கட்டிடங்கள் கட்டியோருக்கு வரி ரசீது வழங்குவது போன்ற பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளன.

தாங்கள் கூறும் குறைகளை சரிசெய்வதில்லை என்று கவுன்சிலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டிய சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. குப்பையை முறையாக கிடங்குக்கு கொண்டு சென்று அழிப்பதில்லை. ஆங்காங்கே சாலையோரத்தில் குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர்.

செயல் அலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் துல்கருணை சேட், நகரத் தலைவர் ஜலாலுதீன், செயலாளர் அகமது ஜலால், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் சையது இப்ராகிம் ஆகியோர் பேரூராட்சிகளின் உதவி இயக்குநரிடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘எந்த புகார் தெரிவித்தாலும் செயல் அலுவலர் இல்லை என்று கூறி விடுகின்றனர். பிறப்பு, இறப்பு சான்றுகள், பிளான் அப்ரூவல் போன்றவை பெற முடியாமல் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உடனடியாக செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்’ என்றனர்.

x