சிங்கம்புணரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள் எரிப்பு: மக்கள் புகார்


சிவகங்கை: சிங்கம்புணரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு தினமும் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சுற்றுப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகளும் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால் மருத்துவமனை வளாகம் பராமரிப்பின்றி புதர்மண்டிக் காணப்படுகிறது.

இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அடிக்கடி வருவதால் உள்நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். பிரேதப் பரிசோதனை அறையை சுற்றிலும் புதர்மண்டி இருப்பதோடு, மின் விளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதிக்கு செல்லவே அச்சப்படுகின்றனர்.

மருத்துவமனையில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை முறைப்படி அகற்றி, சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. அதை மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டி, இதர குப்பையோடு சேர்த்து எரிக்கின்றனர்.

இதனால் மருத்துவமனையை சுற்றி குடியிருப்போர், கண் எரிச்சல், சுவாச பிரச்சினை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுப்பதோடு, புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

x