திருநங்கைகளுக்கு ‘தனிக் கொள்கை’- தமிழக அரசுக்கு தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு கோரிக்கை!


விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணா, ஆல்கா, விமலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

விழுப்புரம்: “கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப உரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றில் திருநங்கைகளுக்கு தனி கொள்கையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அருணா, ஆல்கா ஆகியோர் இன்று (மே 5) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “விழுப்புரத்தில் வரும் 12-ம் தேதி, மிஸ் கூவாகம் நிகழ்ச்சி வெள்ளி விழா நிகழ்வாக நடைபெற உள்ளது. ஆஞ்சநேயர் திருமண மண்டபத்தில் முதல் சுற்றும், புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் இறுதி சுற்றும் நடைபெறும். திரை நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால், திருநங்கைகளுக்கு நீர்மோர் வழங்கப்படும். முன்னதாக, சென்னை திருநங்கைகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டும் நிகழ்வு வரும் 13-ம் தேதி நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர். மேலும் கூத்தாண்டவர் கோயிலில் தேரோடும் 4 மாட வீதியிலும் கூட்டமைப்பு சார்பில் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்க உள்ளோம்.

எங்கள் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களும், ஊடகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம். கூத்தாண்டவர் கோயிலில் அதிக எண்ணிக்கையில் நிழற்குடை, கழிப்பறை அமைக்க வேண்டும். கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும். பாதுகாப்பு பணியும் கூடுதலாக இருக்க வேண்டும். இது சாதாரணமான திருவிழா அல்ல. ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் திருநங்கைகள் வருகின்றனர்.

நான்கு புறமும், கீற்றுகளை வைத்து கழிப்பறை அமைக்கின்றனர். எங்களுக்கு மொபைல் டாய்லெட் வசதி செய்து கொடுக்க வேண்டும். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறும் காலத்தில் விடுதிகளில் 3 அல்லது 4 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அரசு தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கவில்லை.

கூத்தாண்டவர் கோயிலுக்கு திருநங்கைகள் தானமாக வழங்கும் தங்க தாலி எவ்வளவு என்பது குறித்து தெரிவிப்பதில்லை. நாங்கள் அறுக்கும் தாலிக்கும் கணக்கு இல்லை. கடந்தாண்டு காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரை, திருநங்கைகள் வழங்கிய தாலிக்கு ரசீது கொடுக்கவில்லை. இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட பிறகே, ரசீது கொடுத்தனர். எனவே, இந்தாண்டு நடைபெற உள்ள விழாவில், முழுமையான புள்ளி விவரம் வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

உலகில் பல கோயில்கள் இருந்தாலும், திருநங்கைகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் மட்டுமே உள்ளது. எனவே, இக்கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கிராமத்தில் கட்டிட வளர்ச்சி பெற்றிருந்தாலும், கோயில் வளர்ச்சி பெறவில்லை. தங்கும் வசதி இல்லை. இதனை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, குடும்பத்தில் உரிமை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றை உள்ளடக்கி திருநங்கைகளுக்கு என ‘தனி கொள்கை’யை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்றனர். அப்போது திருநங்கை விமலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x