காளையார்கோவில் அருகே தொட்டி உடைந்து வீணாகும் தண்ணீர்: குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமம்


சிவகங்கை: காளையார்கோவில் அருகே தொட்டி உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. அதேநேரம், குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடியிருப்பில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குளிக்க, துணி துவைக்க போன்ற இதரத் தேவைகளுக்காக ஆழ்த்துளைக் கிணறு, மோட்டாருடன் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.

தற்போது அந்தக் கிராமத்துக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதரத் தேவைகளுக் காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டியும் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து மேட்டுக்குடியிருப்பு மக்கள் கூறுகையில், ‘ குடிநீரும் முறையாக வருவதில்லை. இதர தேவைகளுக்காக பயன்படுத்திய தொட்டியும் உடைந்துவிட்டது. கோடை காலம் என்பதால் தண்ணீர் தேவை அதிகரித்தது. இதனால் உடைந்த தொட்டியில் தண்ணீரை ஏற்றிப் பிடித்து வருகிறோம். ஆனால், பெரும்பாலான தண்ணீர் வீணாகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்ல. தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

x