வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெற்று வரும் இடத்துக்குச் செல்லும் சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் மேட்டுக் காட்டில் 2022ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. 2022 செப்டம்பர் இறுதி வரை இப்பணிகள் நடைபெற்றன. 2ம் கட்ட அகழாய்வு பணிகள் 2023ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கின. இந்த அகழாய்வில் பழங்கால பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.
அதோடு, சங்கு வளையல்கள், சுடு மண் காதணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் என 4,660 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 3ம் கட்ட அகழாய்வுப் பணிகள் 2024 ஜூன் 18ம் தேதி தொடங்கப்பட்டன. இதுவரை 22 குழிகள் தோண்டப்பட்டு 4,100 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
அகழாய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகளை தொல்லியல் துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை பார்வையிட தினமும் ஏராளமானோர் அகழாய்பு நடைபெறும் பகுதிக்குச் சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வரலாற்று ஆய்வாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இங்கு வருகின்றனர்.
இதையடுத்து, விஜயகரிசல்குளம் பிரதான சாலையிலிருந்து அகழாய்வு நடைபெறும் இடம் வரை அண்மையில் தான் புதிதாக சாலை அமைக்கப் பட்டது. இந்நிலையில், விஜயகரிசல் குளம் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், பழக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், குப்பை அனைத்தும் இந்த சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் எடுத்துக் கூறும் அகழாய்வு பணி நடைபெறும் விஜயகரிசல்குளத்துக்குச் செல்லும் சாலையோரம் குப்பை தேங்கி மோசமாக உள்ளது. இப்பகுதியை சுத்தப்படுத்தி முறையாக பராமரிக்க வேண்டும். தொல்லியல் ஆய்வு நடைபெற்ற இடத்தில் கிடைத்த பொருட்களை பொதுமக்கள் தொடர்ந்து பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைக்க வேண்டும் என்று கூறினர்.