டாப்சிலிப்பில் டிரெக்கிங் சென்ற கேரள மருத்துவர் மரணம்: வெளியான அதிர்ச்சி தகவல்கள்!


பொள்ளாச்சி: ஆனைமலை டாப்சிலிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அஜ்சல் சைன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் அஜ்சல் சைன்(26) தனது நண்பர் பாகில் தயூப் ராஜ் (27) உடன், தமிழ்நாடு மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் டாப்சிலிப் பகுதியில் முறையான அனுமதி பெற்று மலையேற்றம் சென்றனர். இவர்களுடன் வழிகாட்டிகளாக சந்தான பிரகாஷ், அஜித்குமார் ஆகியோரும் மலையேற்றத்தை மேற்கொண்டார்கள்.

நேற்று சுமார் 8 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதியில் டிரக்கிங் சென்றவர்கள், மாலை 4.30 மணியளவில் மலையேற்றம் முடித்து மலை அடிவாரத்துக்கு திரும்பினர். மலை அடிவாரத்தை அடைந்த போது அஜ்சலுக்கு உடலில் அதிகமான நீரிழப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். அதேபோல பாகிலுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் உடனடியாக வேட்டைக்காரன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் அஜ்சலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பலியான அஜ்சல் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு மருந்துகளை உட்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அஜ்சலின் குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரின் உடற்கூராய்வு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

x