சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை ஒரு பாதையில் ஓட்டுநர் இல்லாத ரயில் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், பூந்தமல்லி பணிமனையில் 3 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும்.
இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த வகையைச் சேர்ந்த முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த ஆண்டு பிப்.8-ம் தேதி தொடங்கியது.
இப்பணிகள் கடந்த ஆண்டு செப்.22ம் தேதி நிறைவடைந்தது. இந்த ரயில் கடந்த ஆண்டு அக்டோரில் சென்னைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து, பூந்தமல்லி பணிமனையில் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. தற்போது, இந்த ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்கிறது. இதைத்தொடர்ந்து, 3 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து பூந்தமல்லி பணிமனைக்கு வந்தடைந்தன. இந்த ரயில்கள் பல கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திரா மாநிலம் ஸ்ரீசிட்டியில் இருந்து பூந்தமல்லி பணிமனைக்கு மொத்தம் 4 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து வந்தடைந்தன. தற்போது ஒரு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான ஒரு வழிப்பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
மற்ற ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் பூந்தமல்லி பணிமனையில் பலவித சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சோதனைகள் முடிந்தபிறகு, மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் சோதனை ஓட்டத்துக்கு ஏற்றப்பட உள்ளது. இதுதவிர, புதிய ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து வர உள்ளன. மே, ஜூனில் தலா 2 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் பூந்தமல்லி பணிமனைக்கு வர உள்ளன. அந்தரயில்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
28 மெட்ரோ ரயில்கள் வாங்க முடிவு: மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், ”கூட்ட நெரிசலை தவிர்த்து பயணிகளுக்கு நிறைவான சேவை அளிக்க 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்கள் வாங்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவர்கள் மூலம் நிதி பெற்று, இன்னும் நிறைய ரயில்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 1,900 பயணிகள் வரை பயணிக்க முடியும்” என்றனர்.