வேலூர் மாநகர சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல் அமைப்பது எப்போது? - வாகன ஓட்டிகள் அவதி


படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் முக்கிய சந்திப்புகளில் பசுமை நிழற்பந்தல் அமைக்க மேயர் ஆய்வு நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரை நிழற்பந்தல் அமைக்கப்படாததால் சிக்னல்களில் வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை என்று வாகன ஓட்டிகளிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இந்தாண்டு இயல்லைவிட 3 டிகிரி அளவுக்கு அதிமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வட மாவட்டங்களில் வரும் 12ம் தேதி வரை வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, வேலூரில் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் 99 டிகிரி அளவுக்கு இருந்தது. இந்தாண்டின் முதல் சதமாக மார்ச் 26ம் தேதி 101.5 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. அதிகபட்ச அளவாக ஏப்ரல் 10-ம் தேதி 105.1 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. அதன் பிறகு வெயிலின் தாக்கம் அனல் காற்றுடன் சராசரி அளவாக 101 டிகிரி என்றளவில் இருந்து வருகிறது.

இதற்கிடையில், கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், காலை தொடங்கி மாலை வரை அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அரசு அலுவலகங்களில் உப்பு கரைசல் நீரை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதன்படி, தண்ணீர் பந்தல்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் உப்பு கரைசல் நீர் தயாராக வைத்துள்ளனர்.

இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக வேலூர் மாநகரில் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் பசுமை நிழற்பந்தல் அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 4ம் தேதி முக்கிய சந்திப்புகளில் வேலூர் மாநராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நேஷனல் சந்திப்பு, மக்கான் சந்திப்பு, திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் சந்திப்பு, முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி சந்திப்பு ஆகிய 4 இடங்களில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் நிழற்பந்தல் அமைக்கப்படும் என்று மேயர் தெரிவத்தார்.

இந்த ஆய்வு நடத்தி ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிய நிலையில் இதுவரை பசுமை நிழற்பந்தல் அமைக்கப் படவில்லை. வேலூர் நகரில் அனல் காற்றுடன் சுட்டெரிக்கும் வெயிலில் செல்லும் வாகன ஓட்டிகள் சிக்னல்களில் தாங்க முடியாமல் வெப்பக்காற்றில் நின்று செல்கின்றனர். கோடை மழையும் இல்லாத நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து இருக்கும் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் விரைவாக பசுமை நிழற்பந்தல் அமைக்க முன்வர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

x