தருமபுரி: பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டியில் சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் தக்காளி தோட்டங்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன், ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் விவசாய பயிர்கள் சேதமடைந்தன.
பெல்ரம்பட்டி, கரகூர், சீரியம்பட்டி, திருமல்வாடி, கரிகுட்டனூர், சீங்காடு, பெல்லு அள்ளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி, வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதில், சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி தோட்டம் சேதமடைந்தன. மேலும் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதமடைந்துள்ளன.
இது குறித்து பெல்ரம்பட்டியைச் சேர்ந்த தக்காளி விவசாயி ராஜன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டியால் தக்காளி தோட்டங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. தக்காளி தோட்டங்களில் கம்பம் நட்டு அதில் கயிறு மூலம் செடிகள் கட்டப்பட்டிருந்தன. காற்றால் கம்பங்கள் சாய்ந்ததில் செடிகள் முறிந்து சேதம் அடைந்துள்ளன.
பயிர் சேதம் குறித்து தகவல் அறிந்தும் அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை. ஏற்கெனவே தக்காளி விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தோட்டம் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது சேதம் அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.