குமரியில் படகு சேவை 6 மணி நேரம் ரத்து: சுற்றுலா பயணிகள் அவதி


கன்னியாகுமரி: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான படகு பழுதானதால் படகு சேவை 6 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடும் வெயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, மற்றும் கண்ணாடி இழை பாலம் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் விவேகானந்தா, குகன், பொதிகை ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன.

தற்போது கோடை விடுமுறை என்பதால் கோடை சீஸன் களைகட்டியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். நேற்று அதிகாலையிலை ஆர்வத்துடன் படகு பயணம் செய்து விவேகானந்தர் பாறையில் இறங்கி, கண்ணாடி இழை பாலத்தில் செல்வதற்காக சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்து நின்றனர். சன்னதி தெருவையும் தாண்டி சுற்றுலா பயணிகள் வரிசை நீண்டிருந்தது. காலையில் வழக்கம்போல் தொடங்கிய படகு சேவை சற்று நேரத்திலேயே ரத்து செய்யப்பட்டது.

`பொதிகை` படகில் திடீரென பழுது ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுடன் அதை இயக் கமுடியவில்லை. ஏற்கெனவே `விவேகானந்தா` படகு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையி்ல குகன் படகை மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஒரு படகை மட்டும் இயக்கினால் சுற்றுலா பயணிகளை விவேகானந்தர் பாறைக்கு கொண்டு விட்டு, திரும்ப அழைத்து வரும் சேவையில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, பொதிகை படகை சீரமைத்த பின்னர் படகு சேவையை தொடங்கலாம் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது. இதையடுத்து கப்பல் போக்குவரத்துக் கழக நுழைவு வாயில் கேட் மூடப்பட்டது. உள்ளே நின்ற சுற்றுலா பயணிகளும் வெளியே அனுப்பப்பட்டனர். வெளியே கடும் வெயிலில் மதியம் வரை காத்திருந்த சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். பல சுற்றுலா பயணிகள் ஆத்திரம் அடைந்து பூம்புகார் கப்பல் போக்குரவத்துக் கழகத்துக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய தால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் பழுதான ‘பொதிகை’ படகு சீரமைக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது. 6 மணி நேரம் படகு சேவை ரத்தால் சுற்றுலா பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். தினந்தோறும் மாலையில் படகு போக்குரவரத்து முடிந்ததும், பயணிகளுடன் சவாரி செல்லும் வகையில் படகு உ.ள்ளதா? என சோதனையிடுவது வழக்கம். ஆனால், இதை முறையாக கடைபிடிக்காததால் சீஸன் நேரத்தில் படகு பழுதாகி சிரமம் ஏற்பட்டுள்ளது.

x