திருநெல்வேலி: ராதாபுரம் வட்டம், உறுமன்குளத்தில் இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் சீத்தலை சிவ லிங்கேஸ்வர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், பக்தர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 10 கேள்விகளுக்கான தகவல்களை கேட்டுள்ளார்.
அதற்கு அறநிலையத் துறை அதிகாரி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோயில் சொத்துகள் வாயிலாக கிடைக்கும் மாத வருமானம் குறித்த தகவல் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் சொத்துகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா, பராமரிப்பவர் யார் என்ற கேள்விக்கு, சொத்துகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்றும், உயிர், உடைமைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பொது நலன் கருதி குத்தகைதாரர்கள் விவரம் வழங்க இயலாது என்றும் பதில் அளித்துள்ளனர்.
அறநிலையத் துறையின் பதில் கடிதம் சமூக வலை தளங்களில் பரவி வரும் நிலையில் இந்த சர்ச்சையான பதில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.