திராவிட ஆட்சியாளர்களது சூழ்ச்சியால் பிரிந்து கிடக்கும் தமிழ் வணிகர்கள்: சீமான் வேதனை


சென்னை: தமிழ் வணிகப்பெருமக்கள், இன்றைக்கு தங்களுக்குள் ஒற்றுமையின்மையாலும், சிறுமுரண்களாலும், திராவிட ஆட்சியாளர்களது சூழ்ச்சியாலும் பிரிந்து பிளந்து தங்கள் பெரும்பலம் இழந்து நிற்பது மிகுந்து மனவேதனை அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பழம்பெரும் வரலாற்றுப் பெருமைகளும், பண்பாட்டுச்செழுமைகளும் நிறைந்த உலகின் மூத்த தொல்குடியான தமிழ்ப்பேரினம் வணிகத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கோலோச்சி வருகின்றது. சோழ மன்னர்களுக்கே நிதி தரும் அளவிற்குப் பெருவணிகர்களான மாசாத்துவானும், மாநாயகனும் சிறந்து விளங்கியதை சிலப்பதிகாரக் காப்பியம் விதந்தோதுகிறது. தமிழின் முதல் காப்பிய நாயகன் கோவலனே வணிகத்திருமகன் என்பதிலிருந்து, தமிழர் வணிகம் எந்த அளவிற்கு தழைத்தோங்கியது என்பதை உணர முடியும்.

கிரேக்கம், யவனம், பாரசீகம் முதல் சீனா, கடாரம், சாவகத்தீவுகள் வரை திரைகடல் ஓடி அறவழி நின்று பெரும்பொருள் தேடி கடல் முழுதும் ஆண்ட தமிழ்வணிகப் பெருமக்களின் திறத்தாலேயே தமிழ் மண்ணின் புகழ் உலகெங்கும் பரவியது.

தமிழ் வணிகப்பெருமக்கள் தமிழ் மக்களின் வாழ்வியல் தேவைகளைத் தீர்ப்பதோடு, தமிழர்களின் வாழ்வாதாரப் போராட்டக் களங்களிலும் தன்னலம் பாராது, அரசதிகாரத்திற்கு அஞ்சாது தோள்கொடுத்துத் துணை நின்று, மக்கள் கோரிக்கைகள் வெல்ல பேருதவி புரிகின்ற பெருந்தகைகளாவார்!

உற்பத்தியாளர்களுக்கும், நுகரும் பொதுமக்களுக்கும் இடையில் தராசு போல நேர்நின்று, பிள்ளைகள் பசியறிந்து ஊட்டும் தாய்போல் மக்கள் தேவையறிந்து தீர்க்கும் வணிகப்பெருமக்களை, "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி" என்று போற்றுகின்றது தமிழ்மறை! அத்தகைய சிறப்புக்குரிய தமிழ் வணிகப்பெருமக்கள், இன்றைக்கு தங்களுக்குள் ஒற்றுமையின்மையாலும், சிறுமுரண்களாலும், திராவிட ஆட்சியாளர்களது சூழ்ச்சியாலும் பிரிந்து பிளந்து தங்கள் பெரும்பலம் இழந்து நிற்பது மிகுந்து மனவேதனை அளிக்கிறது.

இந்திய நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையால், பெரும் நெருக்கடியில் நிலைகுலைந்துள்ள வணிகப்பெருமக்கள், இழந்த தங்கள் பழம்பெருமையை மீண்டும் மீட்டெடுக்கவும், பிறந்த இனமும், பேணிவளர்த்த தமிழ் மண்ணும் மேன்மையுறவும் அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தங்களுக்குள் ஒன்றுபட்டு, ஓரணியில் திரண்டு, வலிமை பெற்று, பல இலட்சம் தமிழ்த்தேசியப் பெருமுதலாளிகளாக உருவெடுப்பதே தமிழினம் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்குமான நிலைத்த தீர்வாகும்!

ஆகவே, தமிழ் வணிகப்பெருமக்கள் பகை யாவையும் நீங்கி, தடைகள் யாவையும் நீக்கி, தமிழ்த்தேசிய முதலாளிகளை உருவாக்கும் இலட்சியப் பேருறுதியை இந்நாளில் ஏற்போம்!

"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்" எனும் வள்ளுவப்பெருமகனார் வாக்கிற்கிணங்க தங்களுடைய வணிகத்திறத்தாலும், அறத்தாலும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்து வாழும் வணிகப்பெருமக்கள் அனைவருக்கும் 42வது தமிழ்நாடு வணிகர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

x