புதுச்சேரி: காசி யாத்திரை சென்ற புதுச்சேரி பக்தர்களின் பேருந்து வழி மாறியது. பர்மிட் இல்லாத காரணத்தால் ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை பிடித்தது. ரூ.60 ஆயிரம் அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து காசி யாத்திரைக்கு உருளையன்பேட்டை, முதலியார் பேட்டை, ராஜ்பவன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 பயணிகள் பேருந்தில் புறப்பட்டனர். இவர்கள் நேற்று முன்தினம் டெல்லியை சுற்றி பார்த்து விட்டு காசி புறப்பட்டனர். ஆனால் பேருந்து வழி மாறியதால் வாகனத்திற்கான பரிமிட் இல்லை என்று கூறி ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை நேற்று அவர்களை பிடித்தது.
இதற்காக ரூ. 60 ஆயிரம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பேருந்தில் சென்ற புதுச்சேரி சுற்றுலா பயணிகள், தங்களை ஓரிடத்தில் வைத்துள்ளதாகவும், பர்மிட் பெற தங்களிடம் பணம் இல்லை என சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா, முதல்வர் ரங்கசாமியிடம் அவர்களை மீட்க கோரிக்கை விடுத்தார்.
ராஜஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்ட புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 10 பக்தர்கள் எதிர்க்கட்சித் தலைவரை தொடர்பு கொண்டனர். அவரது அறிவுறுத்தலின் பேரில் அத்தொகுதி திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கோபால் தமது சொந்த நிதியில் இருந்து ரூ. 60 ஆயிரத்தை ராஜஸ்தானில் உள்ளவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் பர்மிட் தொகையை செலுத்தி அங்கிருந்து அவர்கள் காசி புறப்பட்டதாக தெரிவித்தனர்.