திண்டுக்கல்: பழநியில் தண்ணீரில் மிதந்தபடி பல வகையான யோகாசனங்களை செய்து மாணவ, மாணவிகள் அசத்தினர்.
தண்ணீர் சிக்கனம், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழநி சிவாலயா யோகா மைய மாணவர்கள் தண்ணீரில் மிதந்தபடியும், தண்ணீருக்கு அடியிலும் யோகா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நீச்சல் குளத்தில் நீரில் மிதந்தபடி மச்சாசனம், பத்மாசனம், தித்திலி ஆசனம், சாந்தி ஆசனங்களைச் செய்தனர்.
இதேபோல், நீருக்கு அடியில் சிரசு ஆசனம், பச்சிமோதாசனம், தனுசு ஆசனம் என பல வகையான யோகாசனங்களைச் செய்து, மாணவர்கள் பிரமிக்க வைத்தனர். இம்மாணவர்கள் நீரில் மிதந்தபடியும், நீருக்கும் அடியிலும் யோகாசனம் செய்வதில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ஆசிரியர் சிவக்குமார் கூறும்போது, ”தண்ணீர் மற்றும் மரங்களின் அவசியத்தை உணர்த்தும் விதமாக மாணவர்கள் நீரில் மிதந்தும், நீருக்கு அடியிலும் யோகாசனங்களை செய்தனர். நீருக்கு அடியில் யோகா செய்வதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும்”, என்றார்.