சவ்சவ் விளைச்சல் சரிவு; விலையும் ரூ.3 ஆக குறைந்தது - விவசாயிகள் கவலை


திண்டுக்கல்: சிறுமலையில் வைரஸ் நோய் தாக்குதலால் சவ்சவ் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. வரத்தும் குறைவு, விலையும் குறைவு என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள மலைவாசஸ்தலமான சிறுமலையில் உள்ள புதூர், பழையூர், தென்மலை, பசலிக்காடு, தாளக்கடை, குரங்கு பள்ளம், அகஸ்தியர்புரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் 1,000 ஏக்கர் பரப்பளவில் சவ்சவ் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுமலையில் மூலிகைகள் மிகுந்திருப்பதால் இங்கு விளையும் சவ்சவ் காய்களுக்கு தனி ருசி உண்டு. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அதிகளவு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

சிறுமலையில் உள்ள மலைக்கிராமங்களில் வைரஸ் நோய் தாக்குதலால் சவ்சவ் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. பிஞ்சு காய்கள் கருகி உதிர்ந்து விழுகின்றன. சவ்சவ் கொடிகளும் கருகி வீணாகின்றன. இதனால் சவ்சவ் விளைச்சல் கடுமையாக பாதித்து, வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. வரத்து குறையும் போது, விலை அதிகரிப்பது தான் வழக்கம். ஆனால், வியாபாரிகள், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் சவ்சவ் விலை அதிகரிக்காமல் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு சிப்பம் (40 கிலோ) ரூ.100 முதல் ரூ.120 வரைக்கும், ஒரு கிலோ ரூ.3-க்கும் மட்டுமே விற்பனையானது. வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சிறுமலையைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது: சிறுமலை பகுதியில் வைரஸ் நோய் தாக்குதலால் சவ்சவ் விளைச்சல் குறைந்து வருகிறது. வரத்து குறைந்தாலும் கட்டுப்படியான விலையும் கிடைப்பதில்லை. வியாபாரிகள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனர். ஆனால், சென்னை, ஓசூரில் ஒரு சிப்பம் சவ்சவ் ரூ.600 முதல் ரூ.700 வரைக்கும் விற்பனையாகிறது. சவ்சவ் மூட்டையிடும் சாக்கு பையின் விலை ரூ.10 . குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சாக்கு பைக்கு கூட பணம் தருவதில்லை.

இது தவிர, திண்டுக்கல்லில் வியாபாரிகளால் அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டுக்கு சவ்சவ் விற்னைக்கு கொண்டு செல்ல ஒரு மூட்டைக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், ஒரு கிலோ ரூ.3-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை குறைவாக விற்பதால் அறுவடை கூலி, மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவுக்கு கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். ஒரு கிலோ ரூ.15-க்கு மேல் விற்றால் தான் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். சவ்சவ் விவசாயத்தை பாதுகாக்க அரசே நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

x