திண்டுக்கல்: மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பான ‘ஐபெட்டா’ தேசிய செயலருமான அண்ணாமலை தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மும்மொழி கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது வரை கட்டாயத் தேர்ச்சி முறையே தமிழகத்தில் அமலில் உள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 30 சதவீதம் கட்டாய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில் மறுதேர்வு எழுதலாம். அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டிய நிலை உள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தை பொறுத்தவரை ஒரு வணிக நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6.25 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, ஆட்சி அமைத்தவுடன் முதல் அறிவிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார்.
ஆனால், 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது குழு அமைத்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்கு வங்கியை பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால், அவரது மகன் தற்போது இந்த வாக்கு வங்கியை இழந்து கொண்டு இருக்கிறார்.
கல்வித்துறையில் 15,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மு.க.ஸ்டாலின் கூறியதில் தற்போது ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. கொடுத்தது தந்தை, பறித்தவர் மகன். மும்மொழி கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக இந்தி பேசும் மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தமிழக அரசு முடிவு மட்டுமல்லாமல் எங்களது கொள்கை முடிவிலும் மும்மொழி கொள்கை திட்டத்தை எப்போதும் ஏற்க மாட்டோம். இதே போல், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.