இயற்கை விவசாயம் செழிக்கும் வழி என்ன? - ‘நம்மாழ்வார் விருது’ பெற்ற ஜெகதீசன் பதில்!


திருப்பூர்: இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி விற்பனை செய்யும் குழுக்கள் இருந்தால் மட்டும் இயற்கை விவசாயம் செழிக்கும் என தமிழக அரசால் ‘நம்மாழ்வார் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ள இயற்கை விவசாயி ஜெகதீசன் கூறினார்.

தமிழக அரசு ஆண்டு தோறும் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு, 'நம்மாழ்வார்' விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் , திருப்பூர் மாவட்டம், உடுமலை திரு மூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயம் செய்து வரும் ஜெகதீசன் 2025ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். உயிர்ம (ஆரகானிக்) விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஜெகதீசனுக்கு நம்மாழ்வார் விருதுக்கான 2ம் பரிசாக ரூ.1.50 லடசத்துடன் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கத்தை முதல்வர் வழங்கினார்.

இது குறித்து ஜெகதீசன் கூறும்போது, ”கடந்த, 2009ம் ஆண்டு முதல், இயற்கை விவசாய முறையை பின்பற்றி விவசாயம் செய்து வருகிறேன். நாவல், அத்தி சாகுபடி செய்துள்ளேன். தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்து வருகிறேன்.

ரசாயன விவசாயத்தை மெல்ல மெல்ல குறைத்து, இயற்கை விவசாயத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி விற்பனை செய்யும் குழுக்கள் இருந்தால் மட்டும் இயற்கை விவசாயம் செழிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். விருது பெற்ற விவசாயிக்கு விவசாய அமைப்புகள், சக விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

x