நடிகை பெருமாயி காலமானார் - திரையுலகில் சோகம்


மதுரை: நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை உசிலம்பட்டி பெருமாயி மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள அன்னம்பாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாயி (73). திரைப்பட இயக்குநர் பாரதி ராஜாவின் தெற்கத்திப் பொண்ணு தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து பாரதி ராஜாவின் பல்வேறு படங்களில் நடித்தார். இவர், விஜய்யின் வில்லு, சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் பசுபதியின் ‘தண்டட்டி’ என்ற படத்தில் நடித்தார்.

அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. நேற்று வீட்டில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். இவரது உடலுக்கு திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் உறவினர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

x