குரூப் 4 தேர்வு: கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு வயது வரம்பு சலுகை நீட்டிப்பு!


சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பொதுப் பிரிவைச் (ஓ.சி.) சேர்ந்த கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு வயது வரம்பு சலுகை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வந்த செய்தியின் எதிரொலியாக வயது வரம்பு சலுகையை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் 25ம் தேதி வெளியிடப்பட்டது. 10ம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3,935 காலிப் பணியிடங்களுக்கு தேர்வர்கள் மே 24ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 வரை கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., ஓ.சி. ஆகிய என அனைத்து பிரிவைச் சேர்ந்த கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு வயது வரம்பில் 42 வயது என சலுகை வழங்கப்பட்டு வந்தது.

நிகழாண்டில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுப் பிரிவைச் (ஓ.சி.) சேர்ந்த கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வந்த வயது வரம்பு திடீரென குறைத்து, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு வயது வரம்பு 37 என நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகி வந்த ஆதரவற்ற விதவைகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஏப்ரல் 30ம் தேதி செய்தி வெளியானதையடுத்து, வயது வரம்பு சலுகையை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “ஒரு பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக் கழகத்தால் அளிக்கப் படும் இளநிலை பட்டத்துக்கு (10+2+3) குறைவாக இருந்தால், அப்பதவிக்கு அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதிக்கு மேற்பட்ட பொதுக்கல்வி தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பு விதி பொருந்தாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x