மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,105 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 1-ம் தேதி விநாடிக்கு 1,363 கனஅடியாகவும், 2-ம் தேதி 2,323 கன அடியாகவும், நேற்று முன்தினம் 3,619 கனஅடியாகவும் இருந்தது. இந்நிலையில், நேற்று நீர்வரத்து விநாடிக்கு 4,105 கன அடியாக அதிகரித்தது.
நீர்மட்டம் 108 அடி: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, மேட்டூர் அணை நீர்மட்டம் 107.95 அடியில் இருந்து 108.12 அடியாகவும், நீர் இருப்பு 75.52 டிஎம்சியில் இருந்து 75.76 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 4,000 கனஅடியாக குறைந்தது.