பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியும்: ஆர்​.எஸ்​.​பாரதி கருத்து


சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 சட்டப்பேரவை தேர்தலோடு முடிவடையும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்கு பணிந்தது. அதிமுக- பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது’ என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியிருக்கிறார்.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ் செம்மொழி பிரகடனம், சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், கடல்சார் தேசியப் பல்கலைக்கழகம் என 10 ஆண்டுகளில் திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.

ஆனால் பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்து என்ன செய்தார், எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தார் எனப் பட்டியல் போட முடியுமா, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின்திட்டம், நீட் ஆகியவற்றை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் பழனிசாமியோ பயத்தோடு அவற்றை ஆதரித்தார். பிரதமர் மோடி ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்கே வந்தார். பழனிசாமி அமித் ஷா வீட்டிலேயே தவம் கிடந்தார். ராஜ்பவனில் அடிமைப்பட்டுக் கிடந்தது பழனிசாமியின் அரசு.

நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவற்றை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்தது என எத்தனை துரோகங்கள். டெல்லி தலைமைக்குக் கட்டுப்படும் பழனிசாமிக்கு, மிரட்டல் பற்றியெல்லாம் பேச தகுதி இல்லை. தமிழக உரிமைக்காக குரல் கொடுக்காத பழனிசாமி, திமுகவை பற்றிப்பேச என்ன திராணி இருக்கிறது, குடும்பத்தைக் காப்பாற்ற மோடி அரசின் அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்கத் துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி.

இந்த துரோகக் கூட்டணிக்கு கடந்த தேர்தல்களிலேயே தமிழக மக்கள் தக்கப்பதிலடி கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த அடிமை அமலாக்கத் துறை கூட்டணியை மக்கள் விரட்டி அடிப்பார்கள். அந்தவகையில் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலோடு முடிவது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

x