காற்றுடன் கனமழை: திருவாரூரில் 1,000 ஏக்கர் பருத்தி பயிர்கள் பாதிப்பு


திருவாரூர் மாவட்டத்தில் காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் கமலாபுரம், பூந்தாலங்குடி, மேல மணலி, ராமானுஜ மணலி, ஓகை பேரையூர், கோம்பூர், சித்தனங்குடி, வேலுகுடி, கூத்தாநல்லூர், பூதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை பெய்த கோடை மழையால் பருத்தி சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 3-வது முறையாக விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொண்டனர். தற்போது, பயிர்கள் பூ வைத்து, காய்கள் காய்க்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெற்ற கன மழையால் பருத்திச் செடிகள் முற்றிலுமாக சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில், தற்போது பருத்தி பயிர்கள் வேரோடு சாய்ந்துள்ளது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியது: ஏற்கெனவே பருத்தி சாகுபடி செய்து மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிவாரணம், காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக அறிவித்தும், அதிகாரிகள் எந்த கணக்கெடுப்பும் நடத்தவில்லை. தற்போது மீண்டும் சேதம் அடைந்துள்ளது மிகப் பெரிய இழப்பாக உள்ளது. எனவே உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று, ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

x