ராஜஸ்தானுக்கு வழிமாறிச் சென்ற புதுச்சேரியை சேர்ந்த காசி யாத்ரீகர்கள்: பர்மிட் இல்லாததால் சிக்கல்


புதுச்சேரி: காசி யாத்திரை சென்ற புதுச்சேரி பக்தர்கள் பஸ் வழிமாறியது. பர்மிட் இல்லாத காரணத்தால் ராஜஸ்தான் போக்குவரத்துத்துறை பிடித்தது. அவர்களை மீட்கக்கோரி முதல்வரிடம் புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். இந்நிலையில் இங்கிருந்து பர்மிட் தொகை செலுத்தி காசி பயணத்தை தொடர்ந்தனர்.

புதுச்சேரியிலிருந்து காசி யாத்திரைக்கு உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, ராஜ்பவன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 பயணிகள் பஸ்சில் புறப்பட்டனர். இவர்கள் டெல்லியை நேற்று சுற்றிப் பார்த்து விட்டு காசி புறப்பட்டனர். ஆனால் பஸ் வழிமாறியதால் வாகனத்துக்கான பரிமிட் இல்லை என்று கூறி ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை அவர்களை பிடித்தது.

பர்மிட் இல்லாததால் ரூ.60 ஆயிரம் கட்ட கோரி வாகனத்தை பிடித்தனர். அதுதொடர்பாக அங்கிருந்தோர் தகவலை வெளியிட்டனர். தங்களை ஓரிடத்தில் வைத்துள்ளனர் என்று வீடியோ, புகைப்படங்கள் வெளியிட்டனர். பர்மிட் செலுத்த பணம் இல்லை எனக் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா முதல்வர் ரங்சாமியை தொடர்புகொண்டு, ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பிடித்து வைத்துள்ள புதுச்சேரி பக்தர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோரையும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடர்புகொண்டு, காசி யாத்திரைக்கு சென்ற பயணிகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே ராஜஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 10 பக்தர்கள் உள்ளிட்டோர் எதிர்க்கட்சித் தலைவரை தொடர்பு கொண்டனர். இதையடுத்து அவரின் அறிவுறுத்தலின்பேரில் அத்தொகுதி திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கோபால் தமது சொந்த நிதியில் இருந்து ரூ.60 ஆயிரத்தை ராஜஸ்தானில் உள்ளவர்களின் வங்கிக் கணக்க்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் பர்மிட் தொகையை செலுத்தி அங்கிருந்து அவர்கள் காசி புறப்பட்டதாக தெரிவித்தனர்.

x